Testimonials

TRU.R.M.PALANISAMY

EX.MLA, MODAKKURICHI CONSTITUENCY INDIAN NATIONAL CONGRESS ERODE.

         எனது 6ம் வகுப்பு முதல் SSLC வரையில் கல்வி பயின்றது S.S.V ஆண்கள் உயர்நிலை பள்ளி. அதன்பின் எனது இளங்கலை பொருளாதாரம் பயின்றது சென்னை பச்சையப்பன் கல்லூரியில். பின் முதுகலை அரசியல் பயின்றேன். பின் நான் சுயதொழில் மற்றும் விவசாயம் செய்து வருகின்றேன். நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்பொழுது பெருந்தலைவர் காமராஜரின் மீது கொண்ட பற்றுதலால், நான் பச்சையப்பன் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தேன். பின்பு பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்தபின் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 1998 லிருந்து 2000 வரையிலும் 2001 லிருந்து 2014 வரையிலும் பணியாற்றியுள்ளேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன். மேலும் 2006 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்து உள்ளேன்.

          என்னைப் பொருத்தவரை ஸ்ரீசங்கர வித்யாசாலா உயர்நிலைப்பள்ளியில் நாங்கள் படித்த நாட்களில், தலைமை ஆசிரியராக திரு.கருப்பணன் அவர்களும், உதவித் தலைமை ஆசிரியராக திரு.கே.எம்.பெரியசாமி அவர்களும் பணியாற்றி வந்தனர். அப்பொழுது நாங்கள் மிகவும் நெருக்கமாக அன்புடன் பழகிய ஜெகதீசன், நாச்சிமுத்து, சுப்பராயன், மீனாட்சிசுந்தரம், ரங்கசாமி, நல்லசாமி, பரமசிவம், எல்.சண்முகம் ஆகிய ஆசிரியர்கள் என்னுடன் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இன்றும் எனது நினைவிலிருந்து நீங்காத பசுமையான பள்ளியின் நாட்கள் எப்பொழுதும் இனிமையானவை. என்னுடன் படித்த நண்பர்கள் இப்பொழுதும் பல்வேறு பெரிய பொறுப்புகளில் உள்ளனர் என்பதை நினைக்கும்பொழுது , எங்கள் வாழ்வின் ஓர் அங்கம் ’ஸ்ரீசங்கர வித்யாசாலா பள்ளி” என்பதில் எனக்கு மிக்க பெருமையும் மட்டற்ற மகிழ்ச்சியும் கூட. இன்றைய பள்ளி நிர்வாகத்தின் பல்வேறு புதிய முயற்சிகள், மாவட்டத்தில் பழமையான தனியார் பள்ளி என்ற பெருமையுடன் மேலும் பல்வேறு பரிமாணங்களைப்பெற்று மென்மேலும் வளர எனது அன்பு வாழ்த்துக்கள்…